Cauveri Model Farm at Pazhavathankattalai

மக்களை அதிகாரப்படுத்துதல்

“மறந்து கொண்டே இருப்பது
மக்களின் இயல்பு. நினைவுப்படுத்தி
தூண்டிக் கொண்டே இருப்பது
எம் கடமை”

மக்களை அதிகாரப்படுத்துதல் என்பது இன்று நேற்று உதிர்க்கப்பட்ட சொற்றொடர் அன்று. நமது நாட்டின் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து உச்சரிக்கப்பட்டு வருகின்றது.
“சாதாரண அடித்தட்டு மக்களை மய்யப்படுத்தி அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக செய்யப்படும் பணியே அதிகாரப்படுத்துதல் ஆகும்.
இதை அழகாக நமது நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.கே.ஆர்.நாராயணன் பின் வருமாறு கூறியுள்ளார்.
“அதிகாரமற்றவர்களுக்கும், தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கும், இந்நாட்டின் குடிமக்களாகத் தங்கள் பங்கை ஆற்றுவதற்குரிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டு அவர்களின் வாழ்வியல் தேவைகள் நிறைவேற்றப்படும் போதுதான் அதிகாரப்படுத்துதல் என்பது அதன் உண்மையான பொருளையும் முக்கியத்துவத்தையும் பெறுகிறது”
எனவே அதிகாரப்படுத்துதல் என்பது கீழ்க்கண்ட பொருளை உள்ளடக்கியது.

1. வாய்ப்புகளை உருவாக்குவது
2. திறமைகளை வளர்ப்பது
3. வாழ்வியல் தேவைகள்
இம்மூன்றின் மூலமாக “மக்களை அதிகாரப்படுத்துதல்” என்பது நடைபெறும்.
அதிகாரம் அற்றவர் யார் ? யார் அதிகாரப்படுத்த வேண்டும் ? என்ற கேள்விக்கு விடை காண ஆராயும் போது பலர் அதிகாரப்படுத்தப்படவேண்டிய சூழலில் உள்ளனர்.
1. பெண்கள்
2. தலீத் மக்கள்
3. விவசாய கூலித் தொழிலாளர்கள்
4. விவசாயிகள்
இவர்களை ஒட்டு மொத்தமாக கூற வேண்டுமானால் “வாழ்வின் விளிம்பில் பரிதவித்து நிற்கின்ற பாவப்பட்ட மக்கள்” எனக் கூறலாம். பாகுபாட்டினால்
பெண்களும், சமூக அந்தஸ்து இன்றி தலீத் மக்களும் உழைப்பிற்கு ஏற்ற பகிர்வு இன்றி கூலித் தொழிலாளர்களும், முதலீட்டிற்கு ஏற்றார் போன்று வருவாய் இன்றி விவசாயிகளும் பாதிக்கப்பட்டு அதிகாரமற்றவர்களாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களே இன்றைய சூழலில் தீர்மானம் செய்ய முடியாமல் முடிவெடுக்க முடியாதவராய் காட்சி தந்து வருகின்றனர்.
இப்பிரிவினரே சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சாரம் போன்றவற்றில் ஏற்றத்தாழ்வுகளோடு வாழ்ந்து வருகின்றனர். எனவே இவர்கள் அதிகாரம் பெற வேண்டுமானால் இன்றைய கால கட்ட சமூக அமைப்பிலிருந்து விடுபட்டு வெளியேறினாலே போதும் எனவும் கூறலாம்.

அதிகாரம் எப்படி :
இம்மக்களை அதிகாரப்படுத்த பல வழிமுறைகள் இன்று கையாளப்பட்டு வருகின்றன அவை.

பொருளாதார மேம்பாடு :
பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரம் பெற்றவர்களாக மாற பொருளாதார மேம்பாடு அத்தியாவசியமான ஒன்றாகும். பொதுவாக பொருளாதார மேம்பாடு
அ) சேமிப்பு
ஆ) அரசு திட்டம் பெறுதல்
இ) தொழில் வாய்ப்பு உருவாக்குதல்
சேமிக்காத மனிதன் கூரை இல்லாத வீட்டிற்கு சமம் என்று கூறுவர். ஆம் இன்றைய சூழலில் மனிதனின் செலவினம் பல வழிகளில் விரயம் மற்றும் ஆடம்பரங்களால் உருவாக்கப்படுகிறது. இதனால் பணம் பல வழிகளில் வீணடிக்கப்படுகிறது. எனவே, இப்பணத்தை சேமிப்பதின் மூலம் பண வளம் உள்ளவனாக மாற முடியும். இதன் மூலம் அதிகாரம் உள்ளவர்களாக மாற முடியும்.
இச்சேமிப்பு தனி நபர் அளவில் என்பதைவிட குழு அளவிலான சேமிப்பாக இருந்தால் சிறப்பானதாக இருக்கும். அப்பொழுதுதான் அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் நடைபெற்று நாணய சங்கமாக செயல்பட முடியும். இச்செயல்பாட்டின் தேவைகளை ஒருவருக்கொருவர் அடைய முடியும். தேவையின் அடிப்படையிலான பணிகள் நடைபெறும் போது ஏழை எளிய மக்களும் அதிகாரம் படைத்தவர்களாக மாற முடியும்.
அரசு திட்டங்கள் கூட மனிதர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கின்றது. அரசு திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு மூலம் அரசிடம் உள்ள நலத்திட்டங்கள் எதற்காக
எப்படி பயன்படுத்துவது என்று எண்ணத் தோன்றி அதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடையலாம். அரசிடம் இருந்து பெற வேண்டிய உரிமைகளாக அரசு திட்டங்கள் அடையாளம் காட்டப்படவேண்டும். அரசு திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்நிலை உயர்த்தி வளர்ச்சிகளில் அவர்களை பங்காளியாக்கி பயன்பெறச் செய்து அதிகாரப்படுத்த இயலும்.
தொழில் வாய்ப்புகளை உருவாக்க வழிகாட்டுவதும் பொருளாதார மேம்பாட்டிற்கான அடித்தளமாகும். உள்ளூரில் உள்ள, தங்களது சுற்றுப்புறங்களில் கிடைக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி தொழில் துவங்க மக்களுக்கு வழிகாட்டுதல் மிக முக்கியமானதாகும்.

சமூக மேம்பாடு :
சமூக மேம்பாடும் மக்களின் அதிகாரப்படுத்துவதற்கான ஆயுதமாக உள்ளது. இன்றைய சமூக நிலை ஏற்றத்தாழ்வு உள்ளதாக, சமத்துவம் அற்றதாக உள்ளது. ஆண், பெண் வேறுபாடு, இன வேறுபாடு, ஏழை ‡ பணக்கார வேறுபாடு, கல்வியின்மை, நீதியின்றி அவலமாக காட்சியளித்து கொண்டிருக்கிறது. இக்காட்சியின் கதாநாயகர்களாய் நமது மக்கள் நடித்துக்கொண்டிருக்கின்றனர். இச்சமூக அவல நிலையிலிருந்து மக்களை மீட்காமல் அவர்களை அதிகாரமுள்ளவர்களாக மாற்றுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.
பெண்களின் நிலை உயர்த்தப்பட்டு, சம கூலி, சம அந்தஸ்து, அதிகார பங்களிப்பு அளிக்கப்பட வேண்டும். சாதாரண சாமான்ய மக்களை மய்யப்படுத்துகின்ற சமூகமாக மாற்ற முயற்சி எடுத்தல் அவசிய தேவையாக உள்ளது. ஜாதிப் போர்வையிலான வேறுபாடுகள் களையப்பட வேண்டுமானால் தாழ்ந்தோர் அதிகாரப்படுத்தப்பட வேண்டும். உழைப்பு என்ற ஒன்று இல்லாவிட்டால் உற்பத்தி முழுமையடையாது என்ற உணர்வு மக்களிடம் ஊட்டப்பட வேண்டும். இவைகள் முழுமையாக நடைபெறும் காலமே அதிகாரம் கிடைத்ததற்கான காலமாக அமையும்.

மனிதவள மேம்பாடு

பொதுவாக மனிதர்களிடம் அச்ச உணர்வு பெரும்பான்மையாக உள்ளது. சமூகத்தை பார்க்கின்ற பார்வையிலும் வேறுபாடு உள்ளது. சமூக அறநெறிகளிலிருந்து மாறுபட்டு செல்கின்ற நோக்கும் தென்படுகிறது. இவைகள் மாறுபடுகின்றபோது அதிகாரப்படுத்துதல் பணி எளிதாக அமையும்.
இவைகளை நீக்க மனிதர்களுக்குள் இருக்கின்ற மனித வளங்கள் வீறு கொண்டு எழ வேண்டும். மனித வளங்களான ஆற்றல், அறிவு, திறன்கள் வெளிக்கொணரப்படவேண்டும். இவை மூன்றுமே எதனையும் சிந்திக்க தூண்டுவதாகும். நமது சமூகத்தில் ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு வீழ்ச்சியை வெளிச்சம் போட்டு காட்டும் கருவியாக உள்ளதுதான் மனித வளங்கள், பண்பாட்டு வீழ்ச்சியும், ஒழுக்க குறைவும் மக்கள் பெற வேண்டிய அதிகாரத்திற்கு தடைக்கல்லாக உள்ளது. அதிகாரமற்றவர்களாய் நாம் இருப்பதினால் இழந்தது என்ன என்பதை சிந்திக்க மனித வளம் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனவே மனித வள பயன்பாடு அதிகாரப்படுத்துதலில் முக்கிய பங்காற்றுகிறது.

வாழ்வாதார மேம்பாடு :
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் இன்றைய கால கட்டத்தில் கவலை தரக்கூடியதாக உள்ளது. தன் சுத்தம், சுகாதார வாழ்வு போன்றவையும், நலவாழ்வு வாழ்வதற்கான சூழலும் இன்றைய தினம் மிக குறைவாகவே உள்ளது. பொதுவாக வாழ்வாதாரம் என்று கூறினாலே பணம் பொருள் என்பது மட்டுமே என்ற தவறான கருத்து உள்ளது. ஆனால் அவை உடல் நலம் மற்றும் சுகாதாரத்தையும் உள்ளடக்கியதுதான்.
மனிதனின் இன்றைய வாழ்வில் சத்துணவு உண்ண வழியில்லை. சுகாதார வாழ்வு கேள்விக் குறியாக உள்ளது. உயிர்வாழ முக்கிய தேவையான நீரைக்கூட சந்தேகமில்லாமல் அருந்த முடியவில்லை. நோயுற்றோர்க்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள், சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கழிந்த பின்பும் கூட கிடைக்கவில்லை.
நாளொன்று அருந்த வேண்டிய, உண்ண வேண்டிய உணவு கிடைக்கவில்லையயன்றால் கூட பரவாயில்லை. தினமும் பட்டினியின்றி படுக்கைக்கு செல்ல முடியாத வெட்க கேடான சூழலே நிலவி வருகின்றது. அதிகாரம் இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கிருந்து வரும் ? என்று இவை எல்லாம் கிடைக்கின்றதோ அன்றுதானே அதிகாரம் உள்ளவர்களாக மாற முடியும். ?

அரசியல் மேம்பாடு :
தீர்மானிக்கும் மற்றும் முடிவெடுக்கும் மக்களாக நாம் மாறிடும்போது உண்மையான அரசியல் மேம்பாடு அடைந்துவிட்டதாக பொருள் கொள்ள கூடும். கிராம அளவிலான அரசியலில் பெண்களும், தலீத் மக்களும் மற்றும் நமது இலக்கு மக்களும் பங்கு பெற முடிகின்றதா ?

மேலோட்டமாக உள்ளாட்சி அமைப்புகளில் பங்கு பெற்றாலும் அவர்களால் முடிவெடுக்கும் சூழலில் உள்ளனரா ? தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் மாறிவிட எண்ணியபோதும் முடியவில்லை. காரணம் அரசியல் என்பது இன்றும் கூட சிலரின் கரங்களில்தான் உள்ளது.
அரசியல் மேம்பாடே நமது மக்களின் அதிகாரத்திற்கு வித்திடும் என்பதில் என்றும் எள்ளளவு கூட சந்தேகம் நமக்கு எழக்கூடாது.
மேற்கூறிய எல்லாம் எப்போது நடைபெறும் என்ற சந்தேகம் நமக்குள் நெடுங்காலமாக எழுந்துள்ளது.
கார்ல்மார்க்ஸ் முன்பே நமது தெற்காசிய நாடுகளை பார்த்து கூறியுள்ளார். “குரங்குகளையும் மாடுகளையும் வணங்கும் மக்கள் இருக்கும் வரை சமூக, பொருளாதார, அரசியல் கலாச்சார அமைப்புகளிலிருந்து விடுபட முடியாது” இப்படித்தான் இன்று வரை உள்ளது கலாச்சார அமைப்பு.

மக்கள் அமைப்பு :
இவற்றிற்கு மாற்றாக மக்கள் அமைப்பு உருவாக வேண்டும். அப்படி உருவாகின்ற அமைப்பு மக்களால் ; மக்களுக்காக ; மக்களுடையதாக உருவாகின்ற அமைப்பாக இருக்க வேண்டும். அமைப்பின் மூலமாக மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு, பொருளாதார மேம்பாடு சமூக மேம்பாடு, வாழ்வாதார மேம்பாடு, மனித வள மேம்பாடு, அரசியல் மேம்பாடு, நிலைத் தன்மையுடையதாக மாற்றப்படும். பொது வாழ்வில் நமது செயல்பாடு தரம் குறைந்துள்ளது. இந்த அமைப்பின் மூலம் பொது வாழ்வின் தரத்தினை மீட்டெடுக்க முடியும்.
அதிகாரப்படுத்துதல் என்பது அரசால் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டாலும், தங்களின் வாழ்வின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள போராடி வரும் பெரும்பான்மை மக்களுக்கான சம வாய்ப்பு அளிப்பது குறித்து விவாதிக்காமல் மக்களை அதிகாரப்படுத்தவது கடினமாகும்.
விளைவு :
அதிகாரப்படுத்துதலினால் மக்கள் கீழ்கண்டவாறு உரிமைகள் பெறுவர்.

1. நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம்
2. அடிப்படை வழிமுறைகள் உருவாக்கப்படும்
3. ஜனநாயக வழிமுறைகள்
4. திட்டங்கள் கீழிலிருந்து துவக்கம்
5. சமூக பொருளாதார முன்னேற்றம்

எஸ்.அசோக்குமார்,
ஒருங்கிணைப்பாளர்,
ஜெயங்கொண்டம்.

இளைய சூரியனே....

உன் கண்ணீரைத் துடைப்பதற்கு
கரங்களை தேடாதே !
உன்னுள் கனலை மூட்டினால்
உனக்கு முளைத்திடும்

ஆயிரம் கரங்கள் !
உன் கவலைகளைச்
சிந்தனை நெருப்பினால் சுட்டெறி !

நீ வாழப் பிறந்தவன்
வீழ்வதற்கல்ல...

உன் சூரிய விழிகளை திற
இருட்டுக் கூட்டத்தினை
இடம் தெரியாமல் எரித்திடு !

நண்பா..
நினைவில் வை
இளைய சூரியனே நீதான்

கனவு என்பது
காலை வரை
ஆனால் உன் நினைவு
கல்லறை வரை

நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே !
காயம்பட்ட மனதை நேசி
நேசித்த மனதை காயப்படுத்தாதே

என் உயிர் தோழி !
பூவை விட்டு பிரியாத ஒளி போல
என் மனதை விட்டு பிரியாத

உன் நினைவு என்றுமே வேணும்.

ஜாக்குலின் மேரி

Sustainable Agriculture

Community Based Rehabilitation

New Thrust IV Phase

வாழ்வில் வசந்தம் காண...

1. மகிழ்ச்சி :
“அன்பு செய்ய ஓர் ஆளும்
செயல்பட ஒரு பணியும்
எதிர்பார்ப்புக்கொரு இலக்கும்
மகிழ்ச்சிக்கு இன்றியமையாதவைகளாம்.”   இமானுவேல் காண்ட்

மகிழ்ச்சி என்பது வாழ்வில் ஏற்படும் ஆனந்தம், இன்பம், நிறைவு என பல பொருளில் கூறலாம். மனிதவாழ்வில் ஒவ்வொரு ஜீவனும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றன. மகிழ்ச்சியை தேடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஆகவே மகிழ்வைத் தேடும் படலத்தில் மனித குலம் வெற்றி பெற்றுள்ளதா ? என்கிறபோது சரியான பதிலை கூற முடியாமல் நின்று விடுகிறது.

ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை தேடுகிறோமே ; எங்கு கிடைக்கிறது ? என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடலாம். முடியுமா ? இது என்ன பொருளா ? விலை கொடுத்து வாங்குவதற்கு. அது ஓர் இனம்புரியாத உணர்வு. அதை வெளியே தேடிச்செல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனும் தன்னுள்ளே தேட வேண்டும். “மகிழ்ச்சி சூழ்நிலைகளால் வருவதில்லை, உள்ளத்தால் ஏற்படுவதுண்டு. நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் மகிழ்வடையச் செய்வதில்லை. உள்ளத்தில் இருந்து வெளி வருவது மகிழ்ச்சி அளிக்கும், நாம் எது எது வைத்திருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி ஏற்படாது, எப்படி அதனைப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது” என்கிறார் ய­ய்க் என்ற அறிஞர். ஆகவே மகிழ்ச்சியை நமது உள்ளத்தில்தான் தேட வேண்டும் என்பது புலனாகிறது.

தேர்வினில் வெற்றி பெற்று மாநில அளவில் முதல்வனாக வரும்பொழுது பெரிதும் மகிழ்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டால் மகிழ்கின்றனர். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துவிட்டால் மகிழ்கின்றனர். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்து நல்ல விலைக்கு விற்றால் மகிழ்கின்றனர். இப்படியாக எல்லோரும் ஏதாவது ஒன்றில் மகிழ்கின்றனர். இது போதுமானதா ? இது நிறைவை தந்துவிடுமா ? இது நிரந்தரமானதா ? இல்லை. அப்படியயனில் நிரந்தர மகிழ்ச்சியை எப்படி உருவாக்க முடியும் ?. நிரந்தர மகிழ்ச்சி என்றால் துன்பமே இல்லை என்பதல்ல. இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. ஆனால் துன்பத்தை களைந்து இன்பத்தில் எப்படி வாழ்வது என்பதில்தான் வாழ்வு அடங்கியிருக்கிறது. ஆகவே நிம்மதியை தருகின்ற நிறைவை தருகின்ற மகிழ்ச்சியை நாம் எப்படி உருவாக்க முடியும் என்பதில் கவனம் செலுத்துவோம்.

ஒரு புகழ் வாய்ந்த அரசன் வசதிகள் அனைத்தும் நிரம்ப பெற்றிருந்தான். ஆனால் மனதில் மகிழ்ச்சி இல்லை. அவையில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டான். சரியான விடை கிடைக்கவில்லை. ஆகவே ஒரு முனிவரிடம் கேட்டான். அதற்கு அம்முனிவர் ‘மகிழ்ச்சியாக வாழும் ஒருவரின் மேலாடையை ஒரு நாள் முழுவதும் நீ அணிந்திருக்க வேண்டும்’ என்றார். படை வீரர்களுக்கு மகிழ்ச்சியாக இருப்பவனை கண்டுபிடிக்க ஆணை பிறப்பித்தான். படை வீரர்கள் எத்திசையிலும் தேடியும் எவனும் கிடைக்காமல் வருத்தத்துடன் திரும்பி வந்துகொண்டிருந்தனர். வரும்பொழுது மகிழ்ச்சியாக சிரித்து கொண்டிருந்த பிச்சைக்காரனைக் கண்டனர். அவனிடம் விவரம் சொல்லி அவனது மேலாடையை கொண்டு வந்தனர். அந்த மேலாடையில் பல ஓட்டைகளும், தையல்களும் இருந்தன. பின் பக்கத்தில் பாதி துணியே இல்லை.

ஆம், மகிழ்ச்சியாக இருக்க பணம், பதவி, பட்டம், செல்வங்கள் இருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக உள்ளதை உள்ளவாறு ஏற்று நிறைவடையும் நல்ல மனம் மட்டும் தேவை என்பதை அப்பிச்சைக்காரன் உணர்த்தினான். மகிழ்ச்சி சிறிய சிறிய நற்செயல்களால் உருவாகும். அதாவது ஆதரவு வார்த்தைகளால், இறக்கம் கொண்ட செயல்களால், பிறரைப் புண்படுத்தாமல், பிறருக்காக சிறிது நேரம் ஒதுக்குவதால், பிறரின் துயரத்திற்கு செவிமடுப்பதால், நல்ல ஆலோசனை வழங்குவதால் ஆகிய இவைபோன்ற செயல்களால் மகிழ்ச்சி உருவாகும். இப்படிபட்ட பண்புகளை வாழ்வில் வளர்த்துக்கொள்வோம்.

ஒரு மனிதனின் முகம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாகும். எனவேதான் மகிழ்ச்சியாக இருக்கும்போது சிரிக்கின்றோம். துயரத்தில் இருக்கும் போது சோகமாக இருக்கின்றோம். கோபத்தில் இருக்கும்போது இறுக்கமாக இருக்கின்றோம். மகிழ்ச்சி வெளிப்படுத்தும் சிரிப்பை கடவுள் மனிதனுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறார். எனவேதான் பெரியவர்கள் “சிரிப்பு இல்லாத முகம் தெய்வம் இல்லாத கோயில்” என்பார்கள். ஏனெனில் சிரித்த முகம் தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தாங்கி நிற்கிறது. சிரிப்பு உடலுக்கு ஆரோக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள். ஆகவே மகிழ்ச்சியை தமதாக்கிக் கொள்ள ஒவ்வொருவரும் முயல வேண்டும்.

“பகிர்ந்து வாழும் பொழுது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது” என்பார்கள். எனவே நமது மகிழ்ச்சி நிரந்தரமாக இருக்கவேண்டுமானால் நாம் பிறர் நல செயல்களில்
ஆர்வம் காட்டவேண்டும். பிறரது துயரத்தில் பங்கேற்கும்பொழுது, இருப்பதை பிறரோடு பகிரும்போது, திறந்த மனநிலையோடு பேசும்பொழுது, ஆதரவு
வார்த்தைகள் கூறும்பொழுது, பிறரை மகிழ்ச்சிப்படுத்துகிறோம். அம்மகிழ்வில் பங்கு பெறுகிறோம்.
இன்றைய எதார்த்த நிலை என்ன ? சோர்ந்து போன முகத்துடன் நடக்கின்றனர் பலர். நடை பிணங்களாக வாழ்கின்றனர் சிலர். விரக்தியின் விளிம்பிற்கே சென்று விட்டனர் இன்னும் சிலர். துயரத்தையே வாழ்வாக்கிக் கொண்டனர் பலர். ஏன் நிரந்தர நோயாளியாகவே மாறிவிட்டனர் பலர். காரணம் மகிழ்ச்சி இல்லை. இவர்களிடம் பதவி, பணம், பலம், அதிகாரம், அந்தஸ்து இருக்கின்றது. ஆனால் அன்பு செய்ய ஆள் இல்லை. எனவேதான் சூம்பிய வாழ்வை கொண்டுள்ளனர். எனவே அன்புக்கு அயலான் இருக்க வேண்டும். அவனோடு வாழ்வை பகிரவேண்டும். அப்போதுதான் மகிழ்வை நிரந்தரமாக்க முடியும்.

மெர்லின் மன்றோ ஒரு புகழ் பெற்ற சினிமா நடிகை அதிக பணம் சம்பாதித்ததால் மக்கள் அவளை புகழ்ந்தார்கள். திரை உலகம் அவளுக்கு பல புதிய வாய்ப்புகளை அளித்தது. அவளை கண்டு உலகம் மகிழ்ந்தது. ஆனால் அவளது உள்ளத்தில் மகிழ்ச்சி இல்லை. ஒரு நாள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தன்னையே அழித்துக்கொண்டாள். உலகத்தில் எல்லாவற்றையும் அனுபவித்த நடிகை, மகிழ்ச்சியை மட்டும் அனுபவிக்க முடியவில்லை. காரணம் அவளை அன்பு செய்ய ஆள் இல்லை. பகிரும் மனம் அவளிடம் இல்லை. உள்ளத்து உணர்வுகளை பகிர ஆள் இல்லை. விளைவு மரணத்தை தழுவிக்கொண்டாள். பகிரும் பொழுது மனம் மகிழ்கிறது. இதைத்தான் இறைவனும் விரும்புகிறார்.

மேலும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கிக் கொள்ள, துன்பங்களை, துயரங்களை வேதனைகளை, வருத்தங்களை, விரக்திகளை களைந்து மகிழ்ச்சி கொள்ள சில வழிகள் :

* மனதை ஒழுங்குபடுத்த யோகா செய்யுங்கள்.
* இதமான இசையைக் கேளுங்கள்.
*      இயற்கையை ரசித்து பாருங்கள்
* குடும்பத்தினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்
* பிள்ளைகளோடு விளையாடுங்கள்
* இலக்கை நிர்ணயித்து செயல்படுங்கள்.
இவை அனைத்தையும்விட
* அயலானோடு பகிர்ந்து அன்பு செய்யுங்கள்.
* பிறர் நல்ல செயல்களை பாராட்டுங்கள்.
* எதார்த்த நிலையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
* மனம் சற்று கனமாக இருந்தால் நீங்கள் நம்புகிற ஒருவரிடம் பகிர்ந்து தன்னம்பிக்கை பெறுங்கள்.
(வசந்தம் காண வழிகள் மேலும் தொடரும்...)