மழை நீர் சேமிப்பு

“நீரின்றி அமையாது உலகு” என்றார் திருவள்ளுவர். சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகள் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்றார். இவ்வாறு நீரின் இன்றியமையாமையையும் நீர் தருகின்ற மழையின் சிறப்பினையும் தமிழ்ப் புலவர்கள் காலந்தோறும் போற்றி வந்துள்ளனர்.
அனைவருக்கும் அடிப்படைத் தேவை தண்ணீர். ஒரு நாட்டினுடைய வலிமையும், பெருமையும் கூட நீர் வளத்தால் கணிக்கப்படுகின்றது. இதற்கு மாற்று என்பது இல்லாத காரணத்தால் தண்ணீரை நாம் ஒரு தாய்க்கு ஒப்பாக போற்றுகின்றோம். ஓரிடத்தில் மக்கள் வாழத் தொடங்குவதும், வாழ்க்கையை தொடருவதும் அங்குள்ள நீர் வசதியைக் கொண்டுதான் அமைகின்றது.
மழைநீர் வீணாக்கிவிடாமல் நிலத்துக்குள் அதனைச் செலுத்தி சேமிப்பதை மழைநீர் சேமிப்பு எனலாம். நிலத்தடி நீர்  குறைவதை தடுக்கவும், நீர் வளத்தை பெருக்கவும், நீரின் தரத்தை உயர்த்தவும், கடலோரப் பகுதிகளில் கடல் நீர் நிலப்பகுதியின் கரையைத் தாண்டி உட்புகுவதைத் தடுக்கவும் நிலத்தடி நீரை சேமிக்கிறோம். மேலும் வறட்சி காலங்களில் கால்நடைகளை பராமரிக்கவும் இந்த மழை நீர் அதிகம் தேவைப்படுகிறது. பக்குவமாகச் சேமித்து சிக்கனமாக செலவு செய்வது அறிவார்ந்த செயலாகும்.

சேமிக்கும் முறைகள் :
பயிரிடும் முறைகளை மாற்றியும், பாசன வழிமுறைகளை மாற்றியும், நீரை பயன்படுத்துகின்ற முறையினையும் பெரிய அளவில் நீரை சேமிக்கலாம்.
ஏரி, குளங்களை ஏற்ற முறையில் தூர் வாரி, பாதுகாத்து நீர் வழிகளை அடைக்காமல் பரவலாகப் பெய்கின்ற மழைநீர் முழுவதும் நீர் நிலைகளை வந்தடைய ஆவன செய்ய வேண்டும். வீடுகளில் மழை நீரை சேமிப்பதற்கு சேமிப்புத் தொட்டிகளை அமைத்து வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை மெழுகிய தளமாக மாற்றாமல், மணற்பாங்காகவோ இயல்பான நிலப்பரப்பாகவோ விட்டுவிடுதல் வேண்டும். மாடியில் விழுகின்ற மழை நீரைக் குழாய்கள் மூலம் தரைப்பகுதிக்கு கொண்டு வந்து கிணற்றுக்கும், வீட்டு சுவருக்கும் இடையில் உள்ள நிலப் பகுதியில் ஒரு தொட்டி அமைத்துச் சேமிக்க வேண்டும். கிணறுகள் இல்லாத வீடுகளில் சிறு கால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் மழைநீரை பாய்ச்சி அங்கிருந்து கசிவுநீர்க் குழாய் வாயிலாகக் ஆழ்குழாய்க் கிணற்றுக்குள் செலுத்தி சேமிக்கலாம்.

பயன்கள் :
பெய்த மழைநீரைத் தகுதியான வழிகளில் தேக்கி வைத்துப் பாதுகாப்பதால் நீர் வளத்தைப் பெருக்கலாம். இயற்கை வளங்களைப் பெருக்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், மாசுக் கட்டுப்பாட்டையும் பெறலாம். வளிமண்டல ஓசோன் பாதிக்காதவாறு காக்கலாம். அடை மழையினால் புறநகர்ப் பகுதிகளிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் மழைநீர் வெள்ளமாய்ப் பெருகி வீணாவதைப் தடுக்கலாம். இன்றைய சேமிப்பு நாளைய தேவை என்பதற்கேற்ப பருவ மழையானது பெய்யாது பொய்க்கும்போது ஏற்படுகின்ற தண்ணீர் தட்டுப்பாட்டையும் கடும் பஞ்சத்தையும் மழை நீர் சேகரிப்பால் ஈடுகட்ட முடியும்.

இறுதியாக :
நம் நாடு மிகப் பெரிய வளம் நிறைந்த பூமி ஆகும். காடுகள், மலைகள், ஆறுகள், தரிசு நிலங்கள், கடல்கள், பெரிய ஏரிகள் போன்ற இயற்கை வளம் கொண்ட நம் திருநாட்டில் மழை பெய்கின்ற நாட்களில் அதனை சேமித்தால் மேற்கண்ட வளம் மேலும் பெருகும். இமயம் முதல் குமரி வரை வற்றாது வளம் சுரக்கும் பெரிய ஆறுகள் அன்று முதல் இன்று வரை ஓடிக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் மூலக் காரணம் மழையே.
உயிரின் உறைவிடம் உடல். மழைநீரின் உறைவிடம் நிலம்.  எனவே நிலத்தடி நீரைப் பாதுகாத்து சேமித்து வைப்பதன் வாயிலாக நீண்ட காலத்திற்குத் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்கலாம்.
விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் மழைநீர் சேமிப்பில்  ஈடுபட வேண்டும். மழைநீரை சேமித்து காத்து, பக்குவமாக செலவிட்டு மண் வளம், மனித வளம் காத்து நாடு செழிக்க நாம் வளர முயற்சிகள் எடுப்போம்.

G.மீரா,
கங்கைகொண்டசோழபுரம்